யாரோ இருவரின் உரையாடலில்
தொலைந்துபோன என் நட்புகளை
தேடிப்பயணிக்கும் நினைவுகளில்
ஏதோவொரு பயணத்தில் எதிர்பட்ட
உன் முகம் வந்து போனது
கருணைப்பார்வையும் சிநேகிதப்புன்னகையும்
தவிர உனக்குமெனக்கும் எந்த
சம்மந்தமுமில்லை அந்த பயணத்தில்!
இருந்தும் என் தேடல்
உனைத் தாண்டி தொடர்வதாயில்லை!
உன் புன்னகையில் நின்றுகொண்டு
ஏதாவது காரணங்களை நிரப்பச்சொல்லி
அடம்பிடிக்கிறது மனது!
உனக்கும் எனக்குமான பூர்வஜென்ம
பந்தங்களை கட்டுமானம் செய்து
கோட்டையை எழுப்பிவிட்டது மனம்!
சில எதிர்பார்ப்புகளினூடே
அன்றைய தினத்தின் நீ வந்துபோன
குறிப்புகளை எடுத்துக்கொண்டே
திரும்புகையில் எதிரிருக்கையில் நீ!
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.