Friday, June 5, 2009

எழுதாத தருணங்கள்...

பேச்சுக்களும் சிரிப்புகளும் முடிவுற்று
நண்பர்கள் கலைந்த பின் தோன்றும்
ஞாயிற்றுக் கிழமை மாலையின் தனிமையை
விவரிப்பதற்கு கடினமாயிருக்கிறது.

பேரிரைச்சலுடன் அலைகள் துப்பும்
சமுத்திரத்தின் ஆழ்பகுதி போல
கனத்த மௌனம் போர்த்தி கொள்கிறது
அத்தகைய தருணங்கள்.

மொழிபெயர்க்க முடியாத தனிமைகளை
என்ன செய்வதென்று தெரியாமல்
காகிதம் எடுத்துக் கொள்வேன்.

கடிகார முட்களின் டிக் டிக் ஓசை
மௌனத்தின் இன்னும் கனமாக்கும்.

எத்தனையோ முறை முயன்றிருக்கிறேன்
இது போன்ற தருணங்களை
வார்த்தையில் பதிவு செய்ய...

அமைதியான கிணற்றை போலிருக்கும்
மனதில் எந்த சலனமும் ஏற்படுத்தாமல்...
எதனைத்தான் தூர் வார முடியும்?..

வெகுநேரம் அமர்ந்திருந்து
வார்த்தை ஏதும் தோன்றாமல்
காகிதம் கிழித்தெரிந்து
ஒப்புக் கொள்வேன் என் தோல்வியை.

தனிமைக்கும் எனக்குமான போரில்
இப்படிதான்...
எப்பொழுதும் பலியாகி போகும்...
ஒரு வெள்ளை காகிதம்.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.