Tuesday, April 27, 2010

இருக்குமோ ..??!!!!

அதிர்ந்துபோய் இருக்கிறேன்

அதிகாலையிலிருந்து நடப்பதெல்லாம்
அதிசயமாகவே இருக்கிறது

அவதியில் தொடங்கி
அசதியில் முடியும் நாள் இன்று ...
அற்புதமாய்த் தொடங்கி
அமர்களமாய் நடந்துகொண்டிருக்கிறது

ஆசீர்வதிக்கப் பட்டிருக்கிறேனா நான் ???

சரியான அளவில் எடைகாட்டிய
நியாயவிலைக்கடைத் தராசு

வரும்வரைக் காத்திருந்து
அலுவலக வாசலில் இறக்கிச்
சென்ற நகரப் பேருந்து

முகம்சுளிக்காமல் இருக்கும்
இடம்வரை வந்து
சில்லரை தந்த நடத்துனர்

தவறாய் சாலைகடந்த என்னை
புன்சிரிப்போடு கடந்துபோன
‘ஆட்டோ’ ஓட்டுனர்

வரும்வாகனம் நிறுத்தி என்னைக்
கடந்துபோகச் சொன்ன
போக்குவரத்துக் காவலர்

தாமதமத்தால் பயந்து
ஒதுங்கிய என்னை
தானே அழைத்து
வணக்கம் சொன்ன மேலாளர்

இடைவேளையில்
உணவகத்தில் பணம்கொடுத்த
பக்கமிருந்த கருமி நண்பன்

மாலையில் மேசைமேல்
காத்திருந்தது எதிரேபாராத
பதவி உயர்வு உத்தரவும்,
நெடு நாள் காத்திருந்த
கடனொப்புதல் ஆணையும்,

அதிர்ந்துபோய் இருக்கிறேன்....

என்ன ஆயிற்று எனக்கு ??
எப்படி இதெல்லாம் !!

நெற்றியை அழுத்தியபடி
உறைந்துபோய் இருக்கிறேன் ...

அப்போதுதான் கவனிக்கிறேன் ....
எனது மோதிர விரலில்
சுற்றியபடி இருந்தது
அவளின் உதிர்ந்த தலைமுடி ஒன்று ...

ஒருவேளை...............

இருக்குமோ !!!!!!!????????

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.