Tuesday, January 26, 2010

எங்கே தொலைத்தோம்..........

**"எங்கே தொலைத்தோம்?" **
அந்தப் பழைய புகைப்படத்தில்
சிரிக்கும் சிறுவர்கள் நாம்தானே?
எங்கே தொலைத்தோம்
அந்த இன்முகத்தை?

எங்கே போயின
சிரிக்கும் கண்களும்
சாந்தம் தவழும் முகமும்
அந்த அப்பவித்தனமும்?

படிக்கப்போன இடத்தில்
பள்ளியில் தொலைத்தோமா?
கல்லூரி களவாடிக்கொண்டதா?
எப்படி வந்தன இத்தனை
இறுக்கமும், சுருக்கமும்?

அறிவு வளர வளர
கள்ளம் வந்து
கண்களில் நிறைந்ததா?

காலச்சாட்டை முதுகிலும், முகத்திலும்
இழுத்த இழுப்பில் இறுகிப் போனதா?

அப்பா, அம்மாவிற்காக ஒன்று,
மனைவி, குழந்தைகளுக்காக ஒன்று,
பக்கத்து வீட்டுக்காரர்களுக்காக ஒன்று,
பணியிடத்திற்கென்று ஒன்று,
என்று முகமூடிகளை அணிந்தணிந்து
அந்த முகமூடிகளே முகங்களாக
முற்றிலும் மாறிவிட்டனவா?

என்ன விலை கொடுத்தால்
திரும்பவும் கிடைக்கும்
அந்தப் பழைய முகம்?

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.