Tuesday, January 26, 2010

உயிரில்லா வார்த்தைகள்.....

நேரம்
இரண்டை கடந்து
மூன்றை தொட்டுவிட
துணிந்திருந்தது!

நினைவுகளை
பிரேத பரிசோதனை செய்தபடி
எனதறையில் நான் !

பெத்த பாசத்திற்கு
வாய் கிழிய
கத்திகொண்டிருக்கிறாள் அம்மா...
சாப்பிட வா என்று !!!

அவளுக்காய்
எழுந்து சென்று அமர்கிறேன்!

வெள்ளை சோறும்
சாம்பாரும் என
உணவு பரிமாறப்பட்டு இருந்தது!

பிசைந்து கொண்டிருக்கையில்
எதேச்சையாக
அவள் அண்ணனின்
திருமண பத்திரிக்கை மீது
பார்வை விழுகிறது!

பார்வை அதிலே பதிய
நினைவு
தடம் மாறியது!

அவள்
அன்பின் கண்டிப்போடு
எனை நோக்கி கேட்கிறாள்...
"
மணியாச்சுல?
ஏன் இன்னும் சாப்பிடல ?" என்று -
இரண்டாண்டுகளுக்கு முன்
கல்லூரியில்!!!

கடந்த
இரண்டாண்டு கால பிரிவு
பரிவோடு
கறுப்பு வெள்ளையில்
தன் உணவை பரிமாற,

எழுந்து கை கழுவிவிட்டு
மீண்டும்
எனதறையில் முடங்குகிறேன்!

அம்மா
இன்னமும் கத்திகொண்டிருப்பது
செவியில் மட்டும் விழுகிறது!

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.