Monday, January 25, 2010

தாயன்பைத் தேடி....

தாயன்பைத் தேடி....
------------------------------------------------------------------------------------
என் மூன்றரைவயதில்
என் நெற்றியில் ஒன்று
என் இடதுகன்னத்தில் ஒன்று
என் வலதுகன்னத்தில் ஒன்று
என வாஞ்சையோடு
நீ கொடுத்த மூன்று முத்தங்கள்
நினைவுகளாய் இன்னமும்
என் நியுரான்களில்
கண்ணீரோடு கலந்திருக்கிறது!
நான் சிரித்தபோது
நீ சிரித்தாய்!
நான் அழுதபோது
நீ அழுதாய்!!
உன் உணர்வுகளை மறந்து
என் உணர்வுகளை மட்டுமே
உன் உலகமாக நினைத்த
என் உலகம் நீ!
நான் வணங்கும் தெய்வம் நீ!!
என் செவிலித்தாயான
தமிழன்னையை எனக்கு
முதன்முதலில் கற்றுக்கொடுத்த
என் தமிழாசான்
என் தாயே...
நீ தான்!!
இலக்கணம் படித்ததில்லை! - உனக்கு
தலைக்கணமும் பிடித்ததில்லை!! - thamizh
இலக்கியம் படித்ததில்லை! - உனக்கென
இலக்குகள் எதுவுமில்லை!!
நீ கற்றுக்கொடுத்த
தமிழ்மொழியால்
உன் மகனான நான் - தமிழ்
இலக்கியத்தில் மூழ்கிக்கொண்டிருப்பதை
பார் அம்மா...!!
பல ஆண்டுகளாய்
நம்மிருவரையும் பிரித்துவைத்தே
வேடிக்கை பார்க்கிறது
காலம்!
பிணம்தின்னும் கழுகுகளைப்போலவே
பணம்பண்ணும் எந்திரங்களாய்
மாற்றிவிட்டது காலம்!
பசிதூக்கத்தை மறக்கவைத்து
பாசத்தை துறக்கவைத்து
உணர்வுகளை இழக்கவைத்து
உறவுகளை தொலைக்கவைத்து
மனிதநேயத்தை மறக்கவைத்து
மரக்கட்டைகள் போல
மாற்றிவிட்டது காலம்!!
மீசை முளைத்தபின்னும் - முகத்தில்
முடிமுளைத்தபின்னும்
உருவமது மாறியபின்னும் - என்
பருவமது மாறியபின்னும்
கலப்படமில்லாத தாயபபாலைபபோன்ற
பரிசுத்தமான உனன்பைத்தேடும்
மூன்றரைவயது பாலகன் நான்!!

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.