மனதில் அவள் முகம்
பரவசத்தில் பூரித்தது
என்னோடு இயற்கையும்
புதுத்தோரணம் வழியெலாம் !
சில மரங்களில் பல நிறங்கள்
பல மலர்களில் புது நிறங்கள் !!
பசும்பட்டிலாடும் மலைத்தோழி
சிந்தும் புன்னகையோ நீர்வீழ்ச்சி?
எந்த பிஞ்சுகள் கூட்டம்
பறக்க விட்டது இப்பஞ்சுமேக பட்டங்களை?
எந்த வோவியன் தெளித்தது
இப்பள்ளத்தில் படரும் பசு(ம்)மையை?
பஞ்சபூத இரசம் விதைத்து
அழகை பிரசவித்த தாயவள் யார்?
இளங்குளிர் தென்றலில்
என்னுணர்வு நனைந்தது
செங்கதிரின் ஓரப்பார்வையில்
என்னுணர்வு கிளர்ந்தது
மனங்கொண்ட என்னவள் முகங்காண
மரவிடுக்கில் கிரணங்கள் பாய்ந்தது
இளஞ்சூட்டை ஒற்றியெடுக்க
புது நிழற்படையும் பிறந்தது
சலனமற்ற மனம்
மவுனத்தில் கலந்த பேரானந்தம் !
சில மரங்களில் இளவுயிர்கள் !
பல மலர்களில் புது மணங்கள் !
என் மனைவியைக் காண விரைகிறேன்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.